பெரணமல்லூர், செப்.12: பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் பிரசித்தி மிக்க பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் பத்தர்கள் காணிக்கை பணம் செலுத்த வசதியாக 11 நிரந்தர உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந்நிலையில், மீண்டும் நேற்று இந்து சமய அறநிலைத்துறை ஆய்வர்கள் முத்துசாமி, நடராஜன், செயல் அலுவலர் ஹரிஹரன், மேலாளர் ஜெகதீசன், செல்வகுமார், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் தமிழ்ச்செல்வன், ஆகியோர் முன்னிலையில் நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு பத்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் காலை முதல் இரவு 7 மணி வரை எண்ணப்பட்டது. இதில் ₹47 லட்சத்து 56 ஆயிரத்து 118 ரொக்கபணமும், 300 கிராம் தங்கம், 308 கிராம் வெள்ளி என பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி இருந்தனர். இதனையடுத்து பக்தர்களின் காணிக்கை பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. மேலும் பெரணமல்லூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.