காரிமங்கலம், அக்.8: ஆயுதபூஜை நெருங்குவதையொட்டி, காரிமங்கலத்தில் நேற்று கூடிய சந்தையில் ₹15 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை பிரசித்தம். அதற்கு முன்னதாக திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்றஅள்ளி, குடிமேன அள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர். 1 லட்சத்து 50 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து ஒரு காய் ₹8 முதல் ₹16 வரையிலும் விற்பனையானது. இதன் மூலம் சுமார் ₹15 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து குறைந்த நிலையில், விலை உயர்ந்து காணப்பட்டது. ஆயுத பூஜை நெருங்குவதையொட்டி, தேங்காய் விலை உயர்ந்து வருவதாகவும், வரும் வாரத்திலும் இதே நிலை நீடிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.