பெங்களூரு: ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்களின் ரத்தத்தில் இயற்கையாகவே ( ஜீனில்) விளையாட்டு திறன் நிறைந்துள்ளது என துணை போலீஸ் கமிஷனர் அஜய்குமார் பாராட்டினார். பெங்களூரு, ஸ்ரீராமபுரம் டாக்டர் பிஆர் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டி நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற போட்டியில் காலிறுதிக்கு சன்ரைஸ், பாண்டியா பிரதர்ஸ், ஆஸ்டின் டவுன் கேம்ப், கேரளா போலீஸ், ஜீவன்புளு, 777 , அக்னிபுத்ரா மற்றும் டிடி பிரதர்ஸ் அணிகள் தகுதி பெற்றன. அரையிறுதியில் பாண்டி பிரதர்ஸ் மற்றும் 777 அணியும் ஆஸ்டின் டவுன் கேம்ப் மற்றும் டிசி பிரதர்ஸ் அணி மோதியது. கடைசியாக இறுதி போட்டியில் 777 மற்றும் ஆஸ்டின் டவுன் கேம்ப் அணி மோதிய நிலையில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து டைபிரேக்கர் முறைப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் டாசில் 777 அணி பெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் துணை போலீஸ் கமிஷனர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் கமிஷனர் அஜய்குமார் கூறுகையில், “ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்தவர்களிடம் இயற்கையாகவே விளையாட்டு ரத்தம் ஓடுகிறது. சத்தான உணவு சாப்பிடவில்லை என்றாலும் இந்த பகுதி இளைஞர்கள் திறன் மிக்கவர்கள். மாநில, தேசிய அளவில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் இந்த பகுதியை சேர்ந்த வீரர்கள் விளையாடியுள்ளனர். இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அரசின் சார்பில் கால்பந்து விளையாட்டிற்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதால் பொருளாதார ரீதியாக இளைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். ஆண்கள் கால்பந்து போட்டியை போன்று பெண்களுக்கான போட்டியும் எதிர்காலத்தில் நடத்த வேண்டும்’’ என்றார். உதவி போலீஸ் கமிஷனர் அஜய்குமார் பெங்களூரு ஆர்சி கல்லூரி முன்னாள் மாணவர் என்பதும் சிறந்த கால்பந்து வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கால்பந்தாட்ட குழுவின் சார்பில் உதவி போலீஸ் கமிஷனர் அஜய்குமார் மற்றும் நூர்முகமது ஆகியோருக்கு டாக்டர் பிஆர் அம்பேத்கர் கால்பந்து குழு நிர்வாகிகள் சார்பில் மைசூர் தலைப்பாகை அணிவித்து பாராட்டு அளிக்கப்பட்டது. சமூக சேவகர் கங்கா, வடிவேலு, ராஜூ, ராஜேந்திரபிரசாத், சுமன், தீபன், தியாகராஜன், தனசேகர் ,சார்லஸ், அசோக், கணேஷ் உள்ளிட்ட டாக்டர் அம்பேத்கர் கால்பந்து குழு அமைப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்….