வேலூர்: வேலூரில் உள்ள பிரபல நகை கடையின் சுவரில் துளையிட்டு புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த 15 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் பிரபலமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. தரைதளம் உட்பட 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தின் தரை தளத்தில் வைரம் மற்றும் தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் வெள்ளி நகைகள் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாடிகளில் தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆய்வகமும், 5 வது மாடியில் நகை கடையில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பாதுகாப்பு பணியில் இரவுக்காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த நகைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் ரேக்கில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக வைர நகைகள் அதிகளவில் திருட்டுபோனதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் கடையின் பின் பகுதியில் உள்ள சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் உள்ளே புகுந்துள்ளது.பின்னர் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு மீண்டும் அந்த துளையின் வழியாக தப்பிச்சென்றுள்ளனர். நகை கடை முழுவதும் சென்ட்ரலைஸ்டு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடையின் பின்பக்கம் உள்ள சுவரில் துளையிட்டு காற்று வெளியேறும் வென்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தரைதளத்தின் உள்ளே புகுந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உள்ளே வென்டிலேட்டர் குழாய் வழியே ஒரு காவலரை உள்ளே அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள், 500 கிராம் வைரம் திருட்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. புகாரின்பேரில் வடக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டிஐஜி பாபு, எஸ்பி ராஜேஷ்கண்ணன், ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் ஆகியோரும் வந்து ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இரவுக்காவலர்கள், ஊழியர்களிடம் விசாரித்தனர். நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற கும்பல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்று விசாரணை நடத்தும் போலீசார், 4 தனிப்படைகளை அமைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். * ‘‘சிசிடிவி கேமராவில் ஸ்பிரே பெயின்ட்’’நகைக்கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சுவரை துளையிட்டு கடைக்குள் ஒரு நபர் புகுந்து அங்கும் இங்கும் பார்க்கிறார். அதன்பின்னர் அவர் ஒவ்வொரு கேமராவின் அருகில் சென்று தனது கையில் இருந்த பெயின்ட் ஸ்பிரேவை அடிக்கிறார். இதேபோல் கடையில் உள்ள அனைத்து கேமராவிலும் ஸ்பிரே அடிக்கிறார். அதன்பின்னர் துளைக்குள் மற்ற நபர்கள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. ஸ்பிரே அடித்துள்ளதால் சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் பதிவான காட்சிகள் மற்றும் சாலைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.* வடநாட்டு கும்பல் கைவரிசையா?நகை கொள்ளை தொடர்பாக எஸ்பி ராஜேஷ் கண்ணன் கூறுகையில், எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது குறித்து கணக்கிட்டனர். இதில் கடையில் இருந்து 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3.50 கோடியாக இருக்கலாம். இந்த கொள்ளையில் ஈடுபட்டது வடநாட்டு கும்பலா? தமிழ்நாட்டு கும்பலா? என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. கண்காணிப்பு கேமராவில் உருவம் உள்ளது. எத்தனை பேர் உள்ளனர் என்பது தற்போது சொல்ல முடியாது. மொத்தம் 12 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. இதில் மொத்த கேமராக்களையும் மறைத்து ஸ்பிரே அடித்துள்ளனர். ஒரு விக் கிடைத்துள்ளது. அதை எல்லாம் ஆதாரமாக வைத்து தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.* சுவர் ஓரத்தில் விக்கொள்ளை நடந்த நகை கடைக்கு அருகில் தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. கடையின் சுவர் ஓரம் ஒரு விக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நகை கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் அணிந்து வந்ததா என விசாரித்து வருகின்றனர்….