பல்லடம்: பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் மாணிக்காபுரம் ஊராட்சியில் உள்ள கருப்பண்ணசாமி நகரில் குடியிருக்கும் 31 குடும்பத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், மாணிக்காபுரம் ஊராட்சி மந்தை புறம்போக்கில் குடியிருக்கும் 147 பேருக்கு நத்தம் வகை பட்டா வழங்கக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல்லடம் தாசில்தார் ஜீவா, சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பரமசிவம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி முருகசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கருப்பண்ணசாமி நகரில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும், அடுத்து வரக்கூடிய அரசு நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.