திருமுல்லைவாயல்: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், கணபதி நகர், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (33). அம்பத்தூர் தொழிற்பேட்டை தனியார் கம்பெனியில் ஊழியர். இவரது மனைவி புஷ்பலதா (27). வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகண்டன் (11), மோனிஷ் (9) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை லோகநாதன், புஷ்பலதா ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மணிகண்டன், மோனிஷ் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். இதன் பிறகு காலை 10.30மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் பைக்கில் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் சிறுவர்களிடம், உங்களது பெற்றோர் தடுப்பூசி போட்டு விட்டார்களா?, உங்களது ஆதார் கார்டுகளை எடுங்கள் என கேட்டுள்ளார். இதனை அடுத்து, இரு சிறுவர்களும் வீட்டுக்குள் அவரை வரவழைத்து பீரோவில் இருந்த ஆதார் கார்டை எடுத்து காண்பித்துள்ளனர். பின்னர், அவர் அதனை பார்த்து விட்டு, இரு சிறுவர்களையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றார். இரு சிறுவர்களின் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து இருவரையும் மீட்டனர்.இதுகுறித்து, பொதுமக்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அப்போது, பெற்றோரிடம் நடந்தவற்றை இரு சிறுவர்களும் கூறி அழுதுள்ளனர். இதனை அடுத்து, லோகநாதன், புஷ்பலதா ஆகியோர் வீட்டு பீரோவை சோதனை செய்தனர். அதில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. மேலும், வீட்டுக்கு வந்த மர்ம நபர் இரண்டு குழந்தைகளையும் நூதனமுறையில் ஏமாற்றி வீட்டுக்குள் வந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின்படி போலீ சார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.திருவள்ளூர்: மப்பேடு அருகே எறையாமங்கலத்தை சேர்ந்தவர் மணி (55). மப்பேட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்கிறார். இவரது மனைவி வள்ளி (50). நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம்போல் மணி, மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில், வள்ளி மட்டும் தனியாக இருந்தார். அந்த நேரத்தில், பைக்கில் வந்த மர்ம நபர், வள்ளியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவரும் கொண்டு வந்து கொடுத்தார். குடித்து விட்டு அந்த மர்ம நபரும் அங்கிருந்து சென்றார். இதையடுத்து, வீட்டை பூட்டி விட்டு, சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு மப்பேடுக்கு சென்றார் வள்ளி. திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகை திருடு போயிருந்தது.புகாரின்படி மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்….