ராஜபாளையம், அக்.17: ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டார்.
சேத்தூர் புற காவல் நிலையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கன்னியராஜ்(30) என்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கன்னியராஜ் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.