திருபுவனை: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலித்திரம்பட்டு கண்டப்பசாவடி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி சரோஜா (80). இவரது மகள் பூங்காவனம் (60). பூங்காவனம் கணவர் தங்கவேலுவை பிரிந்து மகள் வள்ளியுடன் (29) தாய் வீட்டுக்கு வந்து வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வள்ளி தனது உறவினர் வீட்டுக்கு சென்றதால் சரோஜாவும், பூங்காவனமும் தனியாக வீட்டில் தூங்கியுள்ளனர்.நேற்று அதிகாலை 3 மணியவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் கம்மல் என ஒன்றரை பவுனை திருடிச்சென்றனர். காலையில் நீண்ட நேரமாக இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தாய், மகள் இருவரும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனியாக வசித்து பூங்காவனம் வீட்டுக்குள் நுழைந்த சைக்கோ கொலைகாரர்கள் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது பூங்காவனமும், சரோஜாவும் தொடர்ந்து கூச்சலிட்டதால் இருவரையும் தடியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக கலித்திரம்பட்டு பகுதியில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தபோது அங்குள்ள செங்கல் சூளையில் கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த நாகலிங்கம், அவரது மனைவி அம்சம்மாள் மழைக்கு ஒதுங்கினர். அங்கு சென்ற மர்ம நபர்களில் ஒருவன் அம்சம்மாளை கட்டிப் பிடித்து திடீரென பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது, அவர் கூச்சல்போடவே, ஆத்திரமடைந்து, அம்சம்மாளை மர்ம நபர் தடியால் பலமாக தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்த அம்சம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தாய், மகளை கொலை செய்த சைக்கோ கொலைகாரர்களை பிடிக்க டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்….