ஓசூர், ஆக.10: ஓசூரில் இந்தியன் வங்கி கிளைகள் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள இந்தியன் வங்கி பிரதான கிளையில் இருந்து தொடங்கி, தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை சாலை, ராயக்கோட்டை அட்கோ, பெரியார் நகர், ரயில்வே நிலைய சாலை வழியாக சென்று, இந்தியன் வங்கி கிளையில் நிறைவு பெற்றது.
இதில் அனைத்து இந்தியன் வங்கி கிளைகளில் வைப்பு தொகைக்கு அதிக வட்டி தருவதாக, பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இது குறித்து இந்தியன் வங்கி மேலாளர் சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘400 நாட்களுக்கு வைப்பு நிதிக்கு 7.25 சதவிகித வட்டி, முதியவர்களுக்கு 7.75 சதவிகித வட்டியும், 80வயது கடந்த முதியவர்களுக்கு, 7.85 சதவிகித வட்டியும் வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கி கிளைகளில் குழந்தைகளுக்கு, அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதார்களுக்கு, மகளிருக்கு, மருத்துவர், பட்டய கணக்காளர்கள், வியாபாரிகளுக்கு, கட்டுமான துறையினர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, பள்ளிகளுக்கு என பல்வேறு விதமான கடன்களை இந்தியன் வழங்கி வருகிறது,’ என்றார். இந்த பேரணியில், என்.ஜி.ஜி.ஓ காலனி வங்கி கிளை மேலாளர் வெங்கேடஷ், மத்திகிரி வங்கி கிளை மேலாளர் தாமோதரன், எம்எஸ்எம்இ வங்கி கிளை மேலாளர் சரவணன் மற்றும் வங்கி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.