பந்தலூர், செப்.13: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரையொட்டி நெல்லியாளம் நகராட்சி கட்டுப்பாட்டில் பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. விளையாட்டில் ஆர்வமுள்ள சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நடை பயிற்சியில் ஈடுபடும் நபர்கள், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என இந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுவதால் மைதானம் முழுதும் சேறும், சகதியுமாக இருந்து வருகிறது.
இதனால் விளையாட்டு மைதானம் பயனற்று உள்ளது. இந்நிலையில் விளையாட்டு மைதானத்தில் அடையாளம் தெரியாத வாகன ஓட்டி பள்ளம் ஏற்படுத்தி உள்ளார். இது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த வாகன ஓட்டி மீது நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.