மதுரை, ஜூலை 24: தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் பொதுச்செயலாளர் பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், ‘கொரோனா காலத்தில் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் அதன் தாக்கம் முடிவுக்கு வந்த பின்னரும் பாசஞ்சர் ரயில்களுக்கு பதில் எக்ஸ்பிரஸ் ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. மூத்த குடிமக்களும் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டண சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தற்போது விரைவு ரயில்களில், இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு, ஏசி பெட்டிகளை ரயில்வே அதிகரித்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள நடுத்தர வகுப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகளின் நிலையினை கருத்தில் கொண்டு, ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை கூடுதலாக இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.