கோவை: கோவையில் வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்க நகையை 2 பேர் பறித்து சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அடுத்த தொண்டாமுத்தூர் ரோடு, வடவள்ளி சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் (68). நகை வியாபாரி. இவர், நகைப்பட்டறைகளில் தங்க நகைகளை வாங்கி ஹால்மார்க் முத்திரை பெற்று விற்பனை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து பஸ்சில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு சென்றார். அங்குள்ள நகைப்பட்டறைகளில் 2 கிலோ நகைகள் மற்றும் வசூல் தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு கோவை திரும்பினார். கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வடவள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டார். தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சண்முகத்தை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கி 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7.5 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில் வடவள்ளி போலீசார், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வியாபாரியை 2 பேர் தாக்கி நகை பறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் நடுரோட்டில் ஸ்கூட்டரை மறித்து, பைக்கில் வந்த 2 பேர் சண்முகத்தை சரமாரியாக முகத்தில் குத்துகின்றனர். அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது 2 கிலோ நகை, ரூ.7.5 லட்சம் வைத்திருந்த பேக்கை பறித்துக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். இதை அந்த வழியாக பைக் மற்றும் காரில் சென்ற சிலர் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் உதவி செய்ய முன் வரவில்லை. போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்….
வியாபாரியை தாக்கி 2 கிலோ நகை பறிப்பு: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
previous post