பீஜிங்: மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பேர் போனது சீனாதான். சீனாவின் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. இந்த விளையாட்டுகள் பல இளைஞர்கள் குறிப்பாக சிறுவர்களை அடிமையாக்கி விடுகின்றன. இந்த பிரச்னையை சீனாவும் எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சிறுவர்கள் மொபைலே கதியாக கிடக்கின்றனர். இதனால், சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதை தடுக்க நாளை முதல் புதிய கட்டுப்பாட்டை சீன அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே இனி ஆன்லைன் விளையாட்டை விளையாட முடியும். வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை தலா ஒரு மணி நேரம் என 3 மணி நேரம் மட்டும் விளையாடலாம். ஆன்லைன் விளையாட்டை வழங்கும் நிறுவனங்கள், அதற்கான ஐடி முகவரிகளை கொண்டு இந்த நேரக்கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டுமென சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாடும் நேரம் வெகுவாக குறையும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த 2019ல் சீன அரசு சிறுவர்கள் ஒருநாளைக்கு ஒன்றரை மணி நேரமும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் ஆன்லைன் கேம் விளையாடலாம் என கட்டுப்பாடு விதித்தது குறிப்பிடத்தக்கது….