தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் வலிநிவாரணி மாத்திரைகளை கரைத்து ஊசியில் அடைத்து உடலில் ஏற்றிக்கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து வலிநிவாரணி மாத்திரை, ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வடசென்னை பகுதிகளில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரங்களில் போதை பவுடர்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் வண்ணாரப்பேட்டை காவல் எல்லை உட்பட்ட கிழக்கு கல்லறை சாலை பகுதியில் போதை ஆசாமிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசியமாக தகவல் வந்தது. இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் பிரான்வின் டேனி தலைமையிலான போலீசார் மேற்கண்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கும்பல் தங்களது உடலில் போதை ஊசி செலுத்திகொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், 6 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (24), பழைய வண்ணாரப்பேட்டை காட்பாடா பகுதியை சேர்ந்த சையது அசார் (25), கிழக்கு கல்லறை சாலை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற கோழி உதயா (26), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (25), வினோத் (24), கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் மலிவு விலையில் போதை மாத்திரைகள் வாங்கிவந்து, மருந்தகங்களில் கிடைக்கும் வலிநிவாரணி மாத்திரைகளையும் சேர்த்து கரைத்து ஊசியில் அடைத்து அவற்றை தங்களது உடலில் போட்டுள்ளனர். போதை தலைக்கேறியதும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் இவர்களிடம் போதை மாத்திரை வாங்க வருபவர்களிடம் போதை ஊசி செலுத்தி கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 6 பேர் மீதும் போதை தடுப்புப்பிரிவின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடசென்னை பகுதியில் நாளுக்கு நாள் போதை மாத்திரை, ஊசி, பவுடர்கள், கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முற்றிலும் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….