சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்ததால் ண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் மேட்டமலை தனியார் நிறுவனம் அருகே ஓரமாக வரத்துக் கால்வாய் உள்ளது. இதன்மூலம் சின்னக்காமன்பட்டி, மேட்டமலை காட்டுப்பகுதி மழைநீர், மேட்டமலை, ராமலிங்காபுரம் உள்பட பல கண்மாய்களுக்கு செல்கிறது.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் பகுதியில் செல்லும் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து மண்ணைப் போட்டு மூடியுள்ளனர். தனியார் புதிதாக உருவாக்கியுள்ள பிளாட்களுக்கு செல்ல சாலை அமைத்துள்ளதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரத்து கால்வாயே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து மண்ணை கொட்டியுள்ளனர். கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயை மூடி போடப்பட்டுள்ள சாலையை வருவாய் துறையினர் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.