சென்னை: வன பரப்பை 33 சதவீதம் உயர்த்திட வரும் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான பெரும் திட்டம் உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ₹6 கோடியில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பினை ஈடுசெய்து உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து வன உயிரினங்களுக்கான உணவு வழங்குதல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூடுதல் வசதிகளை உருவாக்கி பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிட ₹15 கோடி மதிப்பில் அறிக்கை அனுப்பி பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் விலங்குகளுக்கு நல்ல உணவு வழங்கவும், கோடைக்காலத்தில் குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கையின்படி தகுதியானவர்களுக்கு சலுகைகள் மற்றும் பணிவரன்முறை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திட வரும் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான பெரும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 10 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு 31 கோடி மரக்கன்றுகள் வீதம் பல்வேறு திட்டங்களில் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்றார்….