சென்னை: வட இலங்கையை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நேற்று 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சோளிங்கர், பூதலூர் பகுதியில் 90மிமீ மழை பெய்துள்ளது. ராமேஸ்வரம், சிவகாசி, ஆர்.எஸ்.மங்கலம் 70மிமீ, காரியாப்பட்டி, திருக்காட்டுப் பள்ளி, மதுரை, பரமக்குடி, ஆர்.கே.பேட்டை 60மிமீ, பெரம்பலூர், தல்லாகுளம், திருத்தணி, திருப்புவனம், விரகனூர் 50மிமீ, துறையூர், தண்டராம்பேட்டை, வாலாஜா, சித்தம்பட்டி, வீரகனூர், பாம்பன், தங்கச்சி மடம், கல்லக்குடி 40மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வடஇலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென் காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 13ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. …