ஊத்தங்கரை, பிப்.5: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கொரப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (42). இவர் தர்மபுரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இதனால் நந்தகுமார், குடும்பத்தினருடன் தர்மபுரியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி, கொரப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் இருந்தவர்கள் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் அங்கு விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் டிவி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நந்தகுமார் கல்லாவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.