திருப்பூர், ஜூலை 11: திருப்பூர் பல்லடம் ரோடு, டி.கே.டி மில் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ கார்த்தி உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 1850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கோவை மாதம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும், திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை பெற்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 1850 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.