பெங்களூரு: ஆபாச சி.டி வழக்கில் சிக்கியுள்ள ரமேஷ் ஜார்கி ஹோளிக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளார். கர்நாடக நீர்ப்பாசனத்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கி ஹோளி இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த ஆபாச சி.டி விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் ஒலிக்க தொடங்கியது. எதிர் கட்சியினர் சி.டி விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு சென்று தடை கோரி 6 அமைச்சர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று போர் கொடி உயர்த்தினர். இதனால் சி.டி விவகாரம் அடுத்த கட்ட விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் ரமேஷ் ஜார்கி ஹோளி அரசியலிலேயே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவரது தரப்பில் இளம் பெண்ணை சமாதானம் செய்வது அல்லது, அந்த பெண்ணை இந்த வழக்கில் இருந்து பின்வாங்கும்படி செய்யும் செயலில் ஈடுபட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இளம் பெண் யாருக்கும் பிடிக்கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று காங்கிரசை சேர்ந்த மனோகர் என்பவர் ரமேஷ் ஜார்கி ஹோளி மற்றும் இந்த ஆபாச சி.டி விவகாரத்தில் அதிகளவு பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி, அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் ஆபாச சி.டி வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கி ஹோளி அந்த வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.5 கோடி வரை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிலரிடம் கோடி கணக்கில் பணம் பறித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுள்ளது. ஆனால் அந்த பணம் எங்கிருந்து வந்தது, எங்கிருந்து எடுத்து கொடுக்கப்பட்டது. அதற்கான கணக்கு வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து அமலாகத்துறை விசாரணை நடத்தவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். எஸ்.ஐ.டி விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கு விசாரணை சென்றால், மேலும் சிலர் சிக்குவதற்கும், உண்மை விவரங்கள் தெரிய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். மத்திய பிரதேசத்திற்கு விரைந்த எஸ்ஐடிபாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு எஸ்.ஐ.டி தரப்பில் 4 முறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் வந்து ஆஜராகவில்லை. அவர் இருக்கும் இடத்தில் உள்ள செல்போன் அலைக்கற்றை வைத்து பிடிக்கலாம் என்று 4 முறை முயற்சித்தனர். குறிப்பாக செல்போன் அலைக்கற்றை மற்றும் சிம்கார்டு, ஐ.எம்.இ எண்ணை வைத்து, சென்னை, ஐதராபாத், ஆந்திரா, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று சோதனை செய்தனர். பெண் கிடைக்கவில்லை. இறுதியாக தற்போது அவர் மத்திய பிரதேசத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு எஸ்.ஐ.டி தனிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். …