மேலூர், ஜூன் 27: மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் மூன்று கரையினருக்கு பாத்தியபட்ட வெள்ளச்சி ஆயி அம்மன், வளநாட்டு கருப்புச்சாமி கோயில் களரி உற்சவ விழா 34 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள செங்குண்டு அய்யனார் கோயிலின் புரவி எடுப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலிருந்து செங்குண்டு கண்மாய் கரை வழியாக புலியன் வகையாறாவினர் மற்றும் பொதுமக்கள் புரவி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து செங்குண்டு அய்யனார் கோவிலில் இறக்கி வைத்தனர்.
பின்னர் அங்கு கிடா வெட்டி சுவாமி தரிசனம் செய்தனர்.
,இதன் தொடர்ச்சியாக நேற்று அரிட்டாபட்டியில் அமைந்துள்ள மழட்டழகி தர்மத்தில் அதிகாலை சென்ற 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புதிய மண் பானைகளில் தீர்த்தம் எடுத்துக்ெகாண்டு வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு, காட்டு களரி பொங்கல் வைத்து, சுடு மண்பானையில் கறிக்குழம்பு சமைத்து ஊர்வலமாக மண் பானையை தலையில் சுமந்து கொண்டு செங்குண்டு கண்மாயில் அமைந்துள்ள குப்பச்சி திடலுக்கு சென்றனர். பின்னர் அந்த திடலில், பங்காளிகள் மற்றும் கிராமத்தார் 300க்கும் மேற்பட்டோர்களுக்கு ஒரே நேரத்தில் கறி விருந்து பரிமாறப்பட்டது.