தண்டையார்பேட்டை: மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கடையில் விற்பனை செய்த கோலிசோடாவில் துர்நாற்றம் வீசியதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(31). நேற்று உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள ஒரு கடையில் கோலிசோடா வாங்கி குடித்துள்ளார். அப்போது, கோலிசோடாவில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகுமார் எஸ்பினேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான குழு கடைக்கு சென்று ஏழு பிளேவர் சோடா மாதிரியை எடுத்து கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்ற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கடையில் விற்பனைக்கு இருந்த அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பரிசோதனை முடிவு வந்தால்தான் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை முழுவதும் `தமிழன்’ என்ற பெயரில் இந்த கோலிசோடா விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது….