மன்னார்குடி : மூவாநல்லூர் அரசு பண்ணையில் மாங்கொட்டை விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு மேற்கொண்டார்.மன்னார்குடி அடுத்த மூவாநல்லூரில் அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இப்பண்ணையில் மாங்கொட் டை விதைப்பு செய்யப்பட்ட வயல்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குறித்து அவர் கூறுகையில், மூவாநல்லூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 71 ஆயிரம் மா கொட்டைகள் நிலம் தயார் செய்து உழவு செய்யப்பட்டு மேட்டு பாத்திகளில் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இம்மாங் கொட்டைலிருந்து 15 ஆயிரம் மாவேர் செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட மா வேர் செடிகளிலிருந்து மா ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.இவ்வாண்டு மா ஒட்டு செடிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை திருவாரூர் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 60 ஹெக்டர் அளவிற்கு மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டத்தின்கீழ் மா ஒட்டுச் செடிகள் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது.இந்த ஒட்டு செடிகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்தும் பயன்பெறலாம். மா ஒட்டுச் செடிகள் மானியத்தில் தேவைப்படுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களை மன்னார்குடி, கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, உதவி பண்ணை மேலாளர் விஜயகுமார் உடனிருந்தார்….