கூடலூர் : மூதாட்டியை கொன்று 50-க்கும் மேற்பட்ட கடைகளை சூறையாடிய யானையை கும்கிகள் உதவியுடன் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவாலா வாளவயல் பகுதியில் பாப்பாத்தி என்ற மூதாட்டியை கொன்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் தேவாலா பஜாரில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து தலைமை வன உயிரின பாதுகாவலர் அளித்த உத்தரவின்படி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள், வனப் பணியாளர்கள் உள்ளிட்ட 60 பேர் குழுவில் உள்ளனர். இது குறித்து முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேஷ் கூறியதாவது: யானை கடந்த இரு நாட்களாக கூடலூர் பகுதியில் அது அடிக்கடி சென்று வரும் இடங்களில் தென்படவில்லை. யானையை நேற்று முன்தினம் கண்காணித்தபோது கேரளா எல்லைக்கு அருகில் சென்று ஒரு கூட்டத்துடன் சேர்ந்து இருப்பது அறியப்பட்டது. இந்த யானையை கண்காணிப்பதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் யானையை கண்டறியும் பட்சத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு 5வது குழுவான டிரேக்கிங் டீம் அந்த இடத்திற்கு சென்று அந்த யானையை கண்காணித்து அதன் பின்னர் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 4 குழுக்களும் விழிப்புடன் இருந்து 24 மணி நேரமும் மக்னா யானை நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள். அந்த யானை மீண்டும் கூடலூர் பகுதிக்குள் வரும் பட்சத்தில் பிடிப்பதற்கான முழு நடவடிக்கையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நேற்று முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்பு ஓம்காரம் முன்னிலையில் நாடுகாணி தாவர மரபியல் பூங்காவில் ஆலோசனை நடந்தது. முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் நாடுகாணி, சேரம்பாடி, பந்தலூர் வனச்சரகர்கள் உள்ளிட்ட வனத்துறையினருடன் யானையின் நடமாட்டம் குறித்தும் அதனை பாதுகாப்பாக பிடிப்பது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர். யானையை பிடிக்க முதுமலையில் இருந்து விஜய் மற்றும் வசீம் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. தற்போது யானைகள் தேவாலா வாளவயல் பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட யானை தேவாலா நீர்மட்டம் பகுதியில் தமிழக,கேரளா எல்லை வனப்பகுதியில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த யானை மீண்டும் ஊருக்குள் வரலாம் என்பதால் இரவு நேரத்திலும் யானையை கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவின்படி யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் வனத்துறையினர் ஆலோசித்து வருவதாகவும், யானையைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட வனத்துறை சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்த அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘வனத்துறையினர் இந்த யானையைப் பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும். யானையை வனப்பகுதியில் விட்டால் மீண்டும் இதே பகுதிக்கு திரும்பி வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே தடாகம் பகுதியில் இருந்து முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட விநாயகன் யானை முதுமலை எல்லையை ஒட்டிய ஸ்ரீ மதுரை மற்றும் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே இந்த யானையை முதுமலை முகாமில் பராமரிப்பது யானைக்கு பாதுகாப்பானது. பொதுமக்களும் நிம்மதியாக இருக்க முடியும்’’ என்றனர். …