மூணாறு : கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழையுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் உள்ளனர். கேரள மாநிலம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், பகல் நேரங்களில் கூட மூணாறு பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.நேற்று காலை முதல் வழக்கத்திற்க்கு மாறாக மூணாறு முதல் பள்ளிவாசல் வரையுள்ள பகுதியில் தான் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது. மேலும், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பனிமூட்டமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இச்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் மின்விளக்குகளை எரிய விட்டப்படி ஊர்ந்து சென்றன. கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் இப்பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலிற்க்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் ரிப்ளக்டர் அமைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….