சிவகங்கை, செப்.30:முன்னாள் படைவீரர்கள், ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் படைவீரர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் அக்.14ம் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், சிவகங்கை என்ற முகவரியில் நேரில் அணுகி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.