திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் நேற்று மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி, மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பளித்தனர்.மணலி எட்டியப்பன் தெருவில் பிரசாரம் செய்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் மணலி பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் அபிவிருத்தி திட்ட பணி மந்தகதியில் நடைபெறுவதால், அதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதற்கு பதிலளித்து பேசிய கே.பி.சங்கர், ‘முன்னாள் திமுக அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமியின் தீவிர முயற்சியால் மணலி மற்றும் சின்னசேக்காடு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. நான் வெற்றி பெற்றவுடன் இந்த பணிகளை துரிதப்படுத்தி, அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்டோருக்கு தடையின்றி அரசின் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்,’ என்றார். இதைக்கேட்ட மூதாட்டிகள் கே.பி.சங்கர் வெற்றிபெற நெற்றியில் திலகமிட்டு ஆசீர்வதித்தனர்.திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள், பெண்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்….