திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் ஆடியோ வெளியிட்ட சொப்னா, என் ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை வெளியிடுவேன் என்றும் மிரட்டுகின்றனர். அந்த வீடியோ கிடைத்தால் அதை அனைவரும் பார்த்து அது உண்மை தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் சொப்னா நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல்வர் பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணத்தை கடத்தினார், அமீரக துணைத் தூதரின் வீட்டிலிருந்து பிரியாணி பாத்திரங்களில் பினராய் விஜயனின் வீட்டுக்கு தங்கம் கடத்தப்பட்டது என்று அவர் கூறிய குற்றச்சாட்டுகள் கேரள அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சொப்னா ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், முதல்வர் பினராய் விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் பிலீவர்ஸ் சர்ச் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பலமுறை பணத்தை கடத்தியதாக ஷாஜ் கிரண் என்பவர் கூறும் தகவல் இடம்பெற்றிருந்தது. அப்போது சொப்னா கூறியது: தன்னை பினராய் விஜயனின் பார்ட்னர் என்று ஷாஜ் கிரண் என்னிடம் கூறினார். கேரளாவிலேயே பெரும் பணக்காரரான பினராய் விஜயன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும், ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் என்னுடைய உயிருக்கும் என் மகன் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்றார். என்னுடைய ஆபாச வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிடப் போவதாகவும் மிரட்டினார். குளியலறையிலோ, படுக்கை அறையிலோ, உடை மாற்றும் அறையிலோ ரகசிய கேமராவை வைத்து படம் பிடித்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.அந்த வீடியோ உங்களுக்கு கிடைத்தால் அனைவரும் பார்த்து அது உண்மை தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆபாச வீடியோ இருப்பதாக கூறினால் பெண்களை எளிதில் மிரட்டி விடலாம் என்பது அவருக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.ஷாஜ் கிரண் மீது சட்ட நடவடிக்கை பிலீவர்ஸ் சர்ச் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: பத்திரிகையாளர் என்ற முறையில் 2014ம் ஆண்டு முதல் ஷாஜ் கிரண் பிலீவர்ஸ் சர்ச் அமைப்புடன் தொடர்பில் இருந்தார். அதன்பின் சுமார் 6 மாதம் அவரது மனைவி எங்களது அமைப்பில் பணிபுரிந்தார். பின்னர் அவரை பணியிலிருந்து நீக்கி விட்டோம். இதுதவிர ஷாஜ் கிரணுடன் எங்களது அமைப்புக்கு எந்த தொடர்பும் கிடையாது. அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபி அதிரடி மாற்றம்ஷாஜ் கிரண் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரான ஏடிஜிபி அஜித்குமார் வாட்ஸ் ஆப் காலில் ஷாஜ் கிரணிடம் பேசியதாக சொப்னா கூறியிருந்தார். இதுகுறித்து விசாரிக்க டிஜிபி அனில்காந்துக்கு பினராய் விஜயன் உத்தரவிட்டார். விசாரணையில் ஷாஜ் கிரணுடன் ஏடிஜிபி அஜித்குமார் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை இடமாற்றம் செய்ய பினராய் விஜயன் உத்தரவிட்டார். இதையடுத்து அஜித்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். அவருக்கு வேறு பதவி வழங்கப்படவில்லை.பேட்டி அளித்த போது மயங்கி விழுந்த சொப்னாபாலக்காட்டில் நேற்று மாலை சொப்னா திடீரென பத்திரிகையாளர்ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை குறிவைத்து போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று, ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது. என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னை கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும்,’ என தெரிவித்தார்.பேட்டியின்போது சொப்னா கண்ணீர் விட்டு அழுதார். நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்க முயன்றபோது, திடீரென வலிப்பு வந்து மயக்கம் போட்டு விழுந்தார். அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர், பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது….