சென்னை: மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை பிரதமரின் உடனடி கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றதாக தெரியவந்துள்ளது. பின்னர், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகிறது. அவர்களில் 17 தமிழர்கள் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர். மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மரில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையை கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மரில் உள்ள தூதரகத்துக்கு இப்பிரச்னை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இந்த பிரச்னையில் பிரதமரின் அவசர தலையீட்டை கோருகிறேன். இந்தியர்களை விடுவித்து, தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகிறது. …
மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
previous post