சிவகங்கை, ஆக.13: சிவகங்கை மாவட்டத்தில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே பராமரிப்பின்றி தெருவில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவைகள் குப்பைகள் தேங்கும் இடங்கள், குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், கோழி மற்றும் ஆடு இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இவைகள் தினந்தோறும் சாலையில் செல்பவர்களை கடித்து வருவது வாடிக்கையாக உள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தெருக்களில் நடமாடும்நிலை உள்ளது. எனவே நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.