திண்டுக்கல், மார்ச் 13: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வரவு, செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணார் இன மக்களின் நிலையை உயர்த்துவதற்கும், கல்வியில் மேம்பாடு அடையச் செய்வதற்கும் ஏதுவாக இவ்வின மக்களின் வாழ்வாதாரம் பற்றிய அறிக்கை மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான மென்பொருள் உருவாக்குதல், கணக்கெடுப்பு நடத்துதல், இணைய முகப்பினை உருவாக்குதல், தொழில்பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள புதிரை வண்ணார் இன மக்களின் வாழ்வாதாரம் பற்றிய அறிக்கை, அதனை செயல்படுத்துவதற்கான மென்பொருள் உருவாக்குதல் மற்றும் கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஐபிஎஸ்ஓஎஸ் என்ற நிறுவனமானது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நல இயக்குனரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடத்த வரும் ஐபிஎஸ்ஓஎஸ் நிறுவன பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.