திருப்பூர்,மே12: திருப்பூரில் காவலர் பல் பொருள் அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர்,காங்கயம் ரோடு, நல்லூர் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் முடி திருத்தும் நிலையம் கட்டப்பட்டு வந்தது.இந்நிலையில் அந்த கட்டிட கட்டுமான பணிகள் முடிந்து நேற்று திறக்கப்பட்டது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் ஆயுதப்படையில் உள்ள மோப்பநாய் படை பிரிவை ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. சசாங்சாய், கூடுதல் டி.எஸ்.பி ஜான்சன் மற்றும் திருப்பூர் சிவில் இஞ்சினியர் அசோசியேசன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.