கோவை, செப்.18: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான கபடி போட்டி கோவை கற்பகம் பல்கலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரிவில் 86 அணிகளும், மாணவிகள் பிரிவில் 38 அணிகளும் பங்கேற்றன. மாணவிகள் பிரிவில் பங்கேற்ற ஆனைமலை விஆர்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
இரண்டாம் இடத்தை சூலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அணியும், ரங்காநாதபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி அணி மூன்றாம் இடமும், மத்தம்பாளையம் சாய் வித்யா நிக்கேத்தன் பள்ளி அணி நான்காம் இடமும் பிடித்தன. மாணவர்கள் பிரிவில் செயின்ட் மைக்கில்ஸ் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. அதேபோல, கலைவாணி மாடல் பள்ளி அணி இரண்டாம் இடமும், சின்னத்தடாகம் அரசு உயர்நிலைப்பள்ளி அணி மூன்றாம் இடமும், எஸ்விஎன் பள்ளி அணி நான்காம் இடமும் பெற்றது.