கொல்கத்தா: கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மோதலில் பலர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 40 லட்சத்து 48 ஆயிரத்து 357 வாக்காளர்களுக்காக, 4,949 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. மொத்தம் 1,139 வாக்குமையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 23,500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சீல்டா மற்றும் கன்னா பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு மையத்துக்கு வெளியே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் வாக்காளர்கள் சிலர் காயமடைந்தனர். எனினும், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடர்ந்தது. பல வார்டுகளில் பாஜ – ஆளும் திரிணாமுல் இடையே மோதல் ஏற்பட்டது. 3வது முறையாக கொல்கத்தா மாநகராட்சி கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இத்தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை மறுநாள் எண்ணப்படுகிறது….