நாகப்பட்டினம், செப்.11: நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கடந்த 7 வாரங்களுக்கு முன்பு வேலை செய்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அப்பகுதி 100 நாள்வேலைத்திட்ட தொழிலாளர்கள் ஒரத்துார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு விட்டு திரும்பிய திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜை வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது தங்களுக்கு 100 நாள் வேலை செய்ததற்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், கட்சி பாகுபாடு பார்ப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இது குறித்து திட்ட இயக்குனர் விசாரித்து சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.