மல்லசமுத்திரம், செப்.1: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சிறு தானியங்கள் குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ல்லசமுத்திரம் வட்டாரத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சிறுதானிய பயிர்கள் சாகுபடி, உற்பத்தியை அதிகரிக்க திட்ட விளக்க பிரசாரம் நடைபெற்றது. இப்பிரசார விழிப்புணர்வு முகாம், மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதை மல்லசமுத்திரம் வட்டார அட்மா குழுத்தலைவர் பழனிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் சென்று சிறுதானியங்களால் ஏற்படும் நன்மைகள், அதில் உள்ள புரதச்சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சிரஞ்சீவி, துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் வேல்முருகன், அலாவுதீன், மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.