மதுராந்தகம், ஏப்.4: மதுராந்தகத்தில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில், தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள் கொண்டு வந்து பாதுகாப்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் அடுக்கி வைத்துள்ளனர். மேலும், வாக்குப்பதிவு செய்யும் மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை மதுராந்தகம் செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் உள்ள வாக்கு மையத்தினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் பாரத், பொம்மா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது, ஆர்டிஓ தியாகராஜன், டிஎஸ்பி சிவசக்தி ஆகியோருடன் ஆலோசனை செய்தனர். இதனைத்தொடர்ந்து, மதுராந்தகம் நகரில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டனர். இதில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தாசில்தார் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.