பெரணமல்லூர், ஜன.5: பெரணமல்லூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை வந்தவாசி தொகுதி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமார் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். தமிழக முதல்வர் பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் 30 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அப்போது தெரிவித்தார். தற்போது தமிழகம் முழுவதும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரணமல்லூர் பேரூராட்சியில் நேற்று அண்ணா சிலை அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கான மண்டல அலுவலர் யுவராஜ் தலைமை தாங்கினார். வந்தவாசி தாசில்தார் பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை வரவேற்றார். இதில் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினர். குறிப்பாக பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் அவர்களது பகுதிகளுக்கு சென்று மனுக்களை பெற்று அப்போதே தீர்க்கும் பிரச்னைகளை தீர்த்து வைத்து உரிய சான்றிதழ்கள் வழங்குகின்றனர். தவிர இதர மனுக்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுவதாகவும், இந்த திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என எம்எல்ஏ தெரிவித்தார். இந்த சிறப்பு முகாமில் பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் அடங்கிய 12 வார்டுகளிலிருந்து சுமார் 600க்கும் அதிகமான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இதில் உடனடியாக மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கு சக்கர நாற்காலிகள், இரண்டு பேருக்கு மின் இணைப்பு வழங்க ஒப்புதல் ஆணை, மூன்று பேருக்கு பட்டா மாறுதல் சான்றிதழ்களை எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் பிடிஓ வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், உதவி மின் செயற்பொறியாளர் ரமேஷ் பாபு, பேரூராட்சி துணை தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் ஏழுமலை கவுன்சிலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.