புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் பதவிக்காலத்தை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர்கள் பதவிக்காலத்தை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக நீட்டிக்க, ஒன்றிய அரசு சமீபத்தில் 2 அவசர சட்டங்களை கொண்டு வந்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க 15 நாட்களே இருந்த நிலையில் இந்த அவசர சட்டங்கள் ஏன் அவசர அவசரமாக கொண்டு வர வேண்டுமென எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், அவசர சட்டங்களை முறைப்படி சட்டமாக்க மத்திய விஜிலென்ஸ் கமிஷன் திருத்த மசோதா, 2021, மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்களை ஒன்றிய அரசு மக்களவையில் நேற்று தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவசர சட்டங்களுக்கான அனுமதியை மறுக்கக் கோரி காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி சட்டப்பூர்வ தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர், ‘துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஏழரை ஆண்டுகளில், இந்த அரசாங்கம் நமது அரசியலமைப்புத் திட்டத்தின் உள்ளார்ந்த அம்சங்களை தகர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த மசோதாக்கள் மூலமாக இரு புலனாய்வு அமைப்பையும் ஒன்றிய அரசு தனது அதிகாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது’ என்றார்.புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (ஆர்எஸ்பி) எம்பி என்.கே.பி.ரேமச்சந்திரன்,பேசுகையில், ‘இந்தச் சட்டங்களை கொண்டு வருவதற்கான அவசரம் அல்லது அசாதாரண சூழ்நிலை என்ன? அதற்கான விளக்கம் எதுவும் அரசிடம் இல்லை. ஒன்றிய பாஜ அரசு சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது’ என்று குற்றம் சாட்டினார்….
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கால நீட்டிப்பு மசோதா தாக்கல்
previous post