உடுப்பி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு இரும்பு, சில்வர், நாணயம் போன்ற பொருட்கள் உடலில் ஒட்டிக்கொள்வதாக கூறியவரை மருத்துவமனையில் சேர்த்து ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் பிபிசி கல்லூரி அருகே வசிப்பவர் ராமதாஸ். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து ேநற்று முன்தினம் தனது வாட்ஸ்அப்பிற்கு வந்த ஒரு வீடியோவை பார்த்துள்ளார். அதில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும், உடலில் இரும்பு, சில்வர், நாணயம் போன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதேபோல் தனது உடலிலும் இதுபோன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள நினைத்தார். இதனால், வீட்டில் இருந்த கரண்டி, ஸ்பூன், நாணயம் போன்ற பொருட்களை தன் உடலில் ஒட்டி பார்த்தார். அப்போது அவரது உடலில் இந்த பொருட்கள் ஒட்டிக்கொண்டது. இதை கண்டு ராமதாஸ் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியும், பயமும் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜி.ஜெகதீஷ் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு இதுபோன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்கிறது என்று கூறுவது தவறான தகவல். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ராமதாசுக்கு ஏற்கனவே பிபி, சுகர் போன்ற பிரச்னை உள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும். ஆய்விற்கு பிறகே உண்மை தெரியவரும்’’ என்றார்….