நெய்வேலி, ஜூன் 14: பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் சிவபிரியா(22). நெய்வேலியை அடுத்த பொன்னன்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் மணிவேல். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் பிப்ரவரி கடந்த 2ம் தேதி திருமணம் நடைபெற்றது. தம்பதி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் திருமணத்திற்கு அளித்த சீர் வரிசைகளை மணிவேல் திருப்பி கொடுத்துவிட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்து வந்த சிவபிரியா நேற்றுமுன்தினம் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இது குறித்து சிவபிரியாவின் தந்தை பாலமுருகன், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெய்வேலி நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆன 4 மாதங்களில் பெண் இறந்ததால், கோட்டாட்சியரால் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.