நெய்வேலி, ஜூலை 29: சென்னையில் இருந்து புறப்பட்ட வந்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், என்எல்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் உள்பட போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறி, பழவகைகளை வழங்கினார். பின்னர் என்எல்சி விருந்தினர் இல்லத்துக்கு சென்று போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவியில் கடந்த 2 நாட்களாக என்எல்சி பரவனாறு தோண்டும் பணி நடந்தது. அதற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று(நேற்று) பாமக சார்பில் நடந்த போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தபோது கல்வீச்சு நடந்தது. இதில் காவல்துறை வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. சரியான நடவடிக்கை மேற்கொண்டதால் என்எல்சி நுழையுவாயில் முன்பு பாமக கட்சியினர் நுழையுயாமல் தடுக்கப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கையாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 800க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். போராட்டங்கள் அறவழியில் நடத்தப்பட வேண்டும். அப்படி அறவழியில் இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.