ஈரோடு, செப்.14: கோபி குள்ளம்பாளையம், வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் தங்கவேல் (67). இவருக்கு கடந்த 6 மாதங்களாக இதய நோய் பாதிப்பில் இருந்து வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தனது மகன் ஜெயக்குமாருடன் பின்னால் அமர்ந்து பைக்கில் மருத்துவமனைக்கு தங்கவேல் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கீரிப்பள்ளம் சிக்னல் அருகில் பைக் நின்ற போது பின்னால் அமர்ந்திருந்த தங்கவேல் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.