நாகப்பட்டினம், ஏப்.13: வேளாங்கண்ணி அருகே குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் மீது மோதி இரண்டு பேர் இறப்பிற்கு காரணமான டிரைவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(56). இவர் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி இரவு மதுஅருந்திவிட்டு காரை ஓட்டி வந்தார். நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி நோக்கி கிருஷ்ணமூர்த்தி காரை ஓட்டிச் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேஷ்(25) என்பவர் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். இரண்டு சக்கர வாகனத்தின் கணேசுக்கு பின்னால் ஆரோக்கியராஜ்(26) என்பவர் அமர்ந்து வந்தார்.
கார் வேளாங்கண்ணி அருகே பாப்பாக்கோயில் பகுதியில் சென்றபோது கணேஷ் ஓட்டிச்சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேஷ், ஆரோக்கியராஜ் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நாகப்பட்டினம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கார்த்திகா விசாரணை செய்து நேற்று தீர்ப்பு கூறினார். இதில் மது அருந்தி விட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணமூர்த்திக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமாக தலா ரூ. 6 ஆயிரமும், அபராத தொகையை கட்டத்தவறினால் தலா 3 மாத சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.