பொன்னேரி: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து குட்கா போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பெங்களூரூவில் இருந்து பொன்னேரி வழியாக மீஞ்சூருக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு மீண்டும் தகவல் கிடைத்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி, காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையில், எஸ்ஐ ஸ்ரீதர், ஏட்டுக்கள் ரவீந்திரன், ராஜாராம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று மீஞ்சூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை போலீசார் சோதனை நடத்தி அனுப்பினர். இதனிடையே மீஞ்சூர் அருகே உள்ள ஒரு குடோனில் 2 கன்டெய்னர் லாரிகளில் இருந்து குட்கா போதைப்பொருட்கள் மூட்டைகளை மினி லாரியில் ஏற்றுவதாக கிடைத்த தகவல்படி தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் விரட்டிச்சென்று இரண்டு பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். கன்டெய்னர் லாரியில் இருந்த ரூ.1 கோடி மதிப்புடைய 6 டன் குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு எதுவும் சிக்கவில்லை. பிடிபட்ட 2 பேரை மீஞ்சூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், மீஞ்சூர், பழைய நாப்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (30), புது கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (30) என்பது தெரியவந்தது. இவர்கள், பெங்களூரூவில் இருந்து குட்கா போதைப் பொருட்களை கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து, 2 கன்டெய்னர் லாரிகள், 2 மின் லாரிகள், 6 டன் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, பொன்னேரி டிஎஸ்பி குணசேகரனிடம் ஒப்படைத்தனர்….