சென்னை: அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்கு மைசூர் செல்வதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்தபோது நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசினார்.விமான நிலையத்திலிருந்து வெளியேறிய என் மீது அவரது மேலாளர் ஜான்சன் தாக்கினார். எனது காதில் அறைந்தார். ஆனால், ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புகிறார்கள். எனவே, உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இங்கு அவதூறு வழக்கு தொடர முடியாது. சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சமரசம் செய்து கொண்ட நிலையில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்….