சென்னை: ஒற்றைத் தலைமை பற்றி வெளியில் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயக்குமார் மீண்டும் சவால் விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். அவருடன் எடப்பாடி ஆதரவாளர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சி.வி.சண்முகம் மட்டும் ஓபிஎஸ்சை நேருக்கு நேர் பார்க்காமல் ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் ஓபிஎஸ்சிடம் தீர்மானம் குறித்து பேசினார்கள்.கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி வருகிற 23ம் தேதி நடைபெறும். இன்று (நேற்று) 3வது கட்டமாக பொதுக்குழு தீர்மான குழு கூடி தீர்மானத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், தீர்மான விவரங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சிதான் முடிவு செய்யும். என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுடைய மனநிலையை மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர்களது கருத்துகளை சொன்னார்கள். இது ஒரு வெளிப்படை தன்மையோடு கூறப்பட்ட கருத்துதான், இதில் சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது. நான் போட்டு உடைத்தது சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது. நான் சொன்னது, அடிமட்ட தொண்டன் நினைப்பதை தான் சொன்னேன். பெரும்பான்மையோர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள், இதில் என்ன தப்பு இருக்கிறது? ஒரு தப்பும் கிடையாது. என் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவன் ஜெயக்குமார் கிடையாது. எனக்கு பதவி வெறி கிடையாது. ஒட்டுமொத்தமான தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் விருப்பத்தை தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் கருத்தாக சொல்லப்பட்டது. அதைதான் நான் வெளியில் சொன்னேன், இன்றைக்கும் அதைத்தான் சொல்கிறேன். ஆனால் ஒற்றையா, இரட்டையா என்று முடிவு எடுக்க வேண்டியது கட்சி தலைமைதான்.இன்று, 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர் கூடி பேசினோம். அந்த குழுதான் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் குழு. அந்த குழு கூட்டம்தான் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஓபிஎ்ஸ் வந்தார். அது அவருடைய விருப்பம். ஏன் எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்று கேட்க முடியாது. என்றார். ஏற்கனவே, ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு தலைமை தாங்குவது ஜெயக்குமார் என்று ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், மீண்டும் ஜெயக்குமார் அதில் என்ன தவறு என்று கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஜெயக்குமார், தனது ஆதரவாளர்கள் அதிகம் பேரை அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.* இரட்டை தலைமை பற்றி பேசவில்லைகூட்டம் முடிந்தபிறகு முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறும்போது, ‘‘ஒற்றைத் தலைமை தீர்மானமாக வருமா? என்று கேட்கிறீர்கள். இதுபற்றி மூத்த நிர்வாகிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல முடிவாக வரும். எந்த தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை முன்கூட்டியே சொல்ல மாட்டாங்க. எந்த கட்சியிலும் சொல்ல மாட்டார்கள். பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிப்பார்கள். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். அதனால் 23ம் தேதி வரை பொறுத்திருங்கள். தீர்மான குழு, அதுபற்றி தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களின் ஒப்புதலுக்காக கொண்டு போவார்கள்” என்றார். அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறும்போது, ‘‘இன்று நடைபெற்ற கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. தீர்மான குழுவில் இந்த குரூப், அந்த குரூப் என்று யாரும் இல்லை. ஏகமனதாக பேசுகிறோம். எது கட்சிக்கு நல்லது என தெரிகிறதோ அதை தீர்மானமாக கொண்டு வருவோம். இரட்டை தலைமை பிரச்னை பற்றி இன்று பேசவே இல்லை” என்றார்….
பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவன் கிடையாது ஒற்றைத் தலைமை பற்றி வெளியில் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? ஓபிஎஸ்சுக்கு ஜெயக்குமார் மீண்டும் சவால்
previous post