மதுரை, செப். 18: புரட்டாசி மாத பிறப்பையொட்டி அழகர்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் திருமஞ்சனம், கருட சேவை உள்ளிட்டவை நடைபெறும்.
இந்நிலையில் அழகர்கோயிலில் நேற்று புரட்டாசி மாதபிறப்பையொட்டி அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு சுந்தரராஜப் பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். கோயில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சந்தனம், மாலைகள், சாற்றி பொங்கல் வைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.