திருப்பூர், டிச. 30: திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியின் ஒரு அங்கமாக ஆராய்ச்சித் துறை இயங்கி வருகிறது. இதன்கீழ் திருப்பூர் தொழில் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல், புதிய தொழில்நுட்பம், புதிய தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற ஆதரவுகளை வழங்கி வருகின்றது. தற்போது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ‘கையேடு’ என்ற தொழில்நுட்ப வழிகாட்டி புத்தகத்தை உருவாக்கும் பணியில் நிப்ட்-டீ கல்லூரியின் ஆராய்ச்சித்துறை இறங்கியுள்ளது.
இதன் பொருட்டு இதற்கான பீல்டு ஸ்டடி ஆனது துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதற்காக சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கண்டறிந்து அவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பின்னலாடை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதன்படி, பின்னலாடை துணியுடன் கூடிய அதற்கான அனைத்து தரவுகள் (ஒரு துணிக்கான நிட்டிங் முதல் பிராசஸிங் முடிய உள்ள அனைத்து தரவுகள்) இருக்குமாயின் அவர்களை நேரில் அல்லது போஸ்ட் மூலம் ஆராய்ச்சித்துறைக்கு அனுப்பும் பட்சத்தில் அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் அதிகப்படியான வெவ்வேறான பின்னலாடை துணி மற்றும் அதன் தரவுகள் வழங்குபவர்களுக்கு புத்தக வெளியீட்டு விழாவில் முதல் 3 சிறப்பு பரிசுகள் அளித்து கௌரவிக்கப்படுவார்கள். இந்த முயற்சி திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக இருக்கும் என நிப்ட்-டீ (கேர்) ஆராய்ச்சித் துறை கமிட்டி சேர்மன் செந்தில்குமார், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தகவல்களுக்கு நிப்ட்-டீ (கேர்) ஆராய்ச்சித் துறை பொறுப்பாளர் அருள்செல்வனை 8220434111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது