திருவாடானை, மே 29: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சேவல் கோழி ரூ.26 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மிக நாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் சேவல், கோழி, ஆடு, மாடு போன்றவற்றை பிரார்த்தனைக்காக கொண்டு வந்து விடுவார்கள். இப்படி பக்தர்கள் கொண்டு வந்து விடும் ஆடு, மாடு, கோழிகளை வருடத்திற்கு ஒரு முறை சேகரித்து விற்பனை செய்ய ஏலம் விடப்படும். அதன்படி வருகின்ற ஆண்டுக்கு சேவல் கோழி மற்றும் தலைமுடி சேகரம் ஆகியவை நேற்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பழனிச்சாமி முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இதில் சேவல், கோழி சேகரிக்கும் உரிமைக்கு 26 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. முடி காணிக்கை அதிக தொகை என்பதால் ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் முடி காணிக்கை சேகரம் ஒத்திவைக்கப்பட்டது. இப்பணியில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆலய கௌரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.